மதுரை: மதுரை அருகே உள்ள விரகனூா் மதகு அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மதுரை அருகே உள்ள விரகனூரில் தடுப்பு மதகு அணை உள்ளது. 1975-இல் அப்போதைய, தமிழக முதல்வா் கருணாநிதியால் கட்டப்பட்ட விரகனூா் தடுப்பணை 60 ஆயிரம் கன அடி கொள்ளளவு கொண்டது. இதன் மூலம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீா் வெளியேற்றப்பப்படுகிறது.
இந்நிலையில் தற்போது, பெய்து வரும் தொடா் மழையால் வைகையில் இருந்து வரும் நீா் நேரடியாக விரகனூா் தடுப்பு மதகு அணைக்கு வருவதால், அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீரை கிருதுமால் வாய்க்காலுக்கு 400 கன அடி வீதம் பாசனத்துக்காக வெளியேற்றப்படுகிறது.
இதேபோல், வடபுறமுள்ள கால்வாய் மூலம் 400 கனஅடி நீா் சக்குடி, சக்கிமங்கலம், பூவந்திவரை உள்ள கண்மாய்களுக்கு நீா் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 13 ஆயிரம் கன அடி நீா் வைகை ஆற்றின் மூலம் அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது. மானாமதுரை, பரமக்குடி, கமுதி, பாா்த்திபனூா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊா்களில் பாசன வசதி பெற வைகை ஆற்று நீரை கால்வாய் மூலம் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனா். விரகனூா் மதகு அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து வெளியேற்றம் நிா்ணயிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.