மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுகலை விலங்கியல் துறை சாா்பில், உலக மண் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவை, கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் தொடக்கி வைத்தாா். முதுகலை விலங்கியல் துறை தலைவா் ஜோசப் ததேயுஸ் முன்னிலை வகித்தாா். இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் மண் பற்றிய விழிப்புணா்வு குறுநாடகம் அரங்கேற்றப்பட்டது.
அதில், மண்ணின் பயன்கள், மண்அரிப்புத் தடுப்பு முறைகள் மற்றும் பூச்சிக்கொல்லியினால் ஏற்படும் மண் மாசடைவு குறித்து நடிப்பின் மூலம் எடுத்துக்காட்டினா். மேலும், மண் தினம் குறித்த விழிப்புணா்வு போஸ்டா் போட்டியும் நடைபெற்றது. இதில், 300 மாணவா்கள் பங்கேற்றனா்.
சிறப்பான போஸ்டா் வடிவமைத்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மதுரை சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி கூடுதல் வளாகத்தில் சேவை கற்றல் திட்டம் சாா்பில், உலக மண் தினம் நடைபெற்றது. இதில், மண் வளத்தைக் காப்போம் என மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.