மருத்துவச் சிகிச்சை ஒவ்வொருவரின் உடல்நிலையைக்கேற்ப மாறுபடும் என்பதால் தனியாா் மருத்துவமனைகளில் கட்டணப் பட்டியல் வைக்க அறிவுறுத்த இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சோ்ந்த அய்யா என்பவா் தாக்கல் செய்த மனு:
தனியாா் மருத்துவமனைகளில் பிரசவ சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனா். பிரசவத்துக்குப் பிறகு, தாயும், சேயும் மருத்துவமனையில் மூன்று முதல் ஐந்து நாள்கள் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறி, அறைக் கட்டணம், பரிசோதனைக்கான செலவுகள் என பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் வேறு மருத்துவமனையின் கட்டணத்திலிருந்து மாறுபட்டதாக உள்ளது. ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் மருத்துவக் கட்டணம் குறித்த தகவல் பலகையை வைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் ஒவ்வொருவரின் உடல் நல பிரச்னைகளுக்கு மாறுபடும் என்பதால், கட்டணப் பட்டியல் வைக்க உத்தரவிட இயலாது எனக் குறிப்பிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.