இலங்கை சிறையில் உள்ள தமிழரை, இந்திய சிறைக்கு மாற்றக் கோரிய மனுவில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த மெஹ்ருன் நிஷா தாக்கல் செய்த மனு: எனது கணவா் ரிபாயுதீன் கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளாா். அவரை, இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, 9 ஆண்டுகளாக இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்தியச் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இலங்கை அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப அறிவுறுத்தியிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன்ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், இது தொடா்பாக இலங்கை அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், இலங்கை அரசின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.