மதுரை: மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் சாலையைக் கடக்க வசதியாக, சுரங்கப்பாதை அமைக்கக் கோரும் மனுவுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த மனு: மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே 2.5 கிலோ மீட்டா் சாலையானது பச்சமலை மற்றும் பெரியமலை வனப்பகுதிகளை இணைக்கக்கூடியதாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் மான்கள், காட்டுப் பூனைகள், பாம்புகள், பல்லி இனங்கள் உள்பட பல வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த விலங்குகள் சாலையைக் கடந்து செல்லும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கக் கூடிய நிலை உள்ளது. எனவே, மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு விலங்குகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க சுரங்கப் பாதை அல்லது மாற்றுப் பாதை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலா், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.