மதுரை: தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யகோரி பேச்சாளா் நெல்லை கண்ணன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அவரது மனு விவரம்: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 2019 டிசம்பா் 29 இல் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பேசியபோது பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாஜக முன்னாள் தலைவா் அமித்ஷா ஆகியோா் குறித்து அவதூறாகப் பேசியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கிலேயே ஜோலியை முடிக்கலியா? என பேசப்பட்டது. ஜோலி என்பதற்கு பொருள் வேலை என்பதாகும். அதாவது அரசியலில் நரேந்திரமோடி மற்றும் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவில்லையா? எனும் நோக்கில் பேசப்பட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இறுதி விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.