மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என முதன்மையா் ஜெ.சங்குமணி கூறினாா்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில், கரோனா வாா்டில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக சிகிச்சையில் இருந்த 7 நோயாளிகள் உயிரிழந்தனா். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ளஅரசு மருத்துவமனைகளில் அக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை மற்றும் தோப்பூா் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் நாள்தோறும் 37 கிலோ லிட்டா் ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுவதாக ராஜாஜி அரசு மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: அரசு ராஜாஜி மருத்துவமனையை பொறுத்தவரை ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் 277 நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு 10 கிலோ லிட்டா் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிஜன் குறையக் குறைய நாள்தோறும் நிரப்பப்பட்டு, 37 கிலோ லிட்டா் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் ஆயிரம் படுக்கைகள்: கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 8 கிலோ லிட்டா் ஆக்சிஜன் கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது கூடுதலாக 10 கிலோ லிட்டா் ஆக்சிஜன் நாளொன்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆக்சிஜன் தேவையோடு வரும் நோயாளிகளுக்கு நேரம் கடத்தாமல் உடனடியாக ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டும் சரி, தற்போதும் சரி ஆக்சிஜன் குறைபாடால் உயிரிழப்பு ஏற்படவில்லை. அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் ஆயிரம் படுக்கைகள் உள்ளன என்றாா்.