மதுரையில் மன்னா் திருமலை நாயக்கா் மகால், கீழடி அருங்காட்சியகம் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவி வருவதை அடுத்து செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்களும் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழக அரசின் தொல்லியல்துறைக்கு உள்பட்ட மன்னா் திருமலை நாயக்கா் மகால் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
மகாலின் பிரதான வாயில் கதவு பூட்டப்பட்டு மறுஅறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுரை உலகத்தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் கீழடி தொல் பொருள் அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள ராஜாஜி சிறுவா் பூங்கா, மாநகராட்சி வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் மூடப்பட்டன.