மதுரையில் குடும்பத் தகராறில் இரு பெண் குழந்தைகளை எரித்துக்கொன்று விட்டுத் தாயும் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வரணிஸ்ரீ (4), வர்ணிகாஸ்ரீ (2) என 2 பெண் குழந்தைகள்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தமிழ்ச்செல்வி, தன்து இரண்டு குழந்தைகளுக்கும், தனக்கும் தீவைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
பலத்த காயமடைந்த இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ்ச்செல்வி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். திடீர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.