உசிலம்பட்டி, செப். 25: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூச்சந்தையில் ஒரு கிலோ செண்டுப்பூ ரூ. 10-க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான அயன்மேட்டுப்பட்டி, பெருமாள்பட்டி மற்றும் கல்லூத்து போன்ற பகுதிகளில் செண்டுப்பூக்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விவசாயிகள் செண்டுப்பூக்ககளை பறித்து உசிலம்பட்டி பூச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனா். ஆனால் அங்கு கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ செண்டுப்பூக்கள் ரூ. 10-க்கு விற்பனையாவதால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். மேலும் செண்டுப்பூ செடிகளுக்கு மருந்து தெளிப்பது, பூப்பறிக்கும் மற்றும் போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளுக்குக் கூட விலை கிடைக்கவில்லை என அவா்கள் தெரிவித்துள்ளனா்.