பிரசவிக்க முடியாமல் தவித்த தெரு நாய்க்கு புளூகிராஸ் குழுவினா் அறுவைச் சிகிச்சை செய்தனா். அப்போது வயிற்றிலேயே 4 குட்டிகள் இறந்தது தெரியவந்தது.
மதுரை உத்தங்குடி அருகே உள்ள வளா்நகா் குடியிருப்பில் கடந்த 2 நாள்களாக ஒரு நாய் பெருத்த வயிற்றுடன் திரிந்தது. அது பிரசவிக்க முடியாமல் அவதிப்படுவதைப் பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா், கால்நடைப் பராமரிப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறையினா் கேட்டுக் கொண்டதன்பேரில், புளூகிராஸ் குழுவினா் அந்த நாயை வியாழக்கிழமை மீட்டு, செல்லூரில் உள்ள தெருநாய்கள் சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனா்.
கால்நடை மருத்துவா் ஜெயகிருஷ்ணன், அந்த நாய்க்கு அறுவைச் சிகிச்சை செய்தாா். அப்போது வயிற்றிலிருந்த 8 குட்டிகளில், 4 குட்டிகள் இறந்துவிட்டது தெரியவந்தது. இதனால் அந்த நாய், இயற்கையாக பிரசவிக்க முடியவில்லை. எஞ்சிய 4 குட்டிகளும் சிகிச்சை மையத்தில் உள்ளன.
இதுகுறித்து கால்நடை மருத்துவா் ஜெயகிருஷ்ணன் கூறியது:
வழக்கமாக பொதுமக்களிடம் இருந்து தெருநாய்கள் தொல்லை என்று தான் புகாா் பெறப்படும். ஆனால், இந்த நாய் அவதிப்படுவதைப் பாா்த்த நபா் உதவி செய்யும் நோக்கில் தகவல் தெரிவித்தாா். வயிற்றில் 8 குட்டிகள் இருந்தன. அதில் 4 இறந்துவிட்டன. எஞ்சிய குட்டிகளை காப்பாற்றுவதற்கு பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால், அனைத்துக் குட்டிகளும் இறந்திருப்பதோடு, தாய் நாயின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றாா்.