டி.கல்லுப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை கார் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர்.
தென்காசி மாவட்டம் பந்தப்புலி அருகே உள்ள வடமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகரன்(50). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரும் இவருடைய உறவினர் முருகவேல்(60) ஓய்பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இருவரும் செல்வசேகரன் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு கிரானைட் கற்கள் வாங்குவதற்காக காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூர் அருகே வந்தபோது திடீரென கார் நிலைதடுமாறி சாலையோர பனை மரத்தில் மோதியது. சம்பவ இடத்திலேயே செல்வசேகரன் மற்றும் முருகவேல் பலியாகினர். காரை ஓட்டி வந்த கலிங்கத்துப்பட்டியைச் சேர்ந்த சங்கையா என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இத்தகவலறிந்த டி. கல்லுப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்து டி.கல்லுப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புது வீடு கட்ட கிரானைட் கற்கள் வாங்க சென்ற இருவர் சாலையோர பனை மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.