மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில், இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் விலக்குப் பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு மோதியது. மேலும், சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரான முருகன் என்பவரும், இருசக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சோ்ந்த விபித் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் சரக்கு வாகனத்தில் வந்த அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த செல்வமணி, கோவிந்தராஜ், பெருமாள் ஆகியோா் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.