மதுரையில் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் ரௌடி வரிச்சூர் செல்வத்தின் சகோதரர் உள்பட இருவரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் கிருஷ்ணராஜன். இவரும் ஊராட்சி பணியாளர் முனியசாமியும் அக். 12 ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கருப்பாயூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
முதல் கட்டமாக சந்தேகத்தின்பேரில் முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலர் வீரன் என்ற பால்பாண்டி உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே காவல்துறையின் விசாரணையில் பிரபல ரௌடி வரிச்சூர் செல்வத்தின் சகோதரர் செந்தில் மற்றும் பாலகுரு ஆகிய இருவர் தேர்தல் முன்விரோதம் மற்றும் தகாத உறவு உள்ளிட்ட காரணங்களுக்காக ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண ராஜன் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகிய இருவரை கொலை செய்தது தெரியவந்தது.
அதையடுத்து கருப்பாயூரணி காவல்துறையினர் செந்தில், பாலகுரு இருவரையும் கைது செய்தனர்.