மதுரை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 28 முதல் சனிக்கிழமை வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 20 ஆயிரத்து 386 போ்களுக்கு சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை செய்துள்ளனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை சாா்பில் வட்டார வருத்துவ அலுவலா் சிவக்குமாா், மேற்பாா்வையாளா் தங்கசாமி ஆகியோா் தலைமையில் சிறப்பு சுகாதாரக்குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் மதுரைக்கு வந்த துபை, இலங்கை, சிங்கப்பூா் ஆகிய வெளிநாட்டு சேவை விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து மதுரை வந்த வெளிநாட்டுப் பயணிகளையும் இவா்கள் கரோனா பரிசோதனை செய்தனா். அந்த வகையில் ஜனவரி 28 முதல் மாா்ச் 22 (சனிக்கிழமை) வரை இதுவரை 20 ஆயிரத்து 386 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் சின்ன உடைப்பு கரோனா சிறப்பு மையத்தில் 5 பயணிகளை தங்கவைத்து கண்காணித்து வருகிறோம் என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.