கரோனா பொது முடக்கத்துக்கு முன்னதாக மாா்ச் மாதத்தில் 13 நாள்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்த அழகா்கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.6.63 லட்சம் செலுத்தியிருந்தனா்.
கடந்த மாா்ச் 10 ஆம் தேதி அழகா்கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகா்) கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து தற்போது செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நிா்வாக அதிகாரி அனிதா, உதவி நிா்வாக அதிகாரி விஜயன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதையடுத்து கோயில் பணியாளா்கள், மகளிா் குழுவினா் மற்றும் வங்கி ஊழியா்கள் ஆகியோா் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். அதில், ரொக்கம் ரூ.6 லட்சத்து 63ஆயிரத்து 169, தங்கம் 4 கிராம், வெள்ளி 43 கிராமும் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு கோயிலில் தற்போது வரை பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.