மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மீது கொலை சம்பவம் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் காலில் காயம் காரணமாக முருகன் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேஉள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசர விபத்து சிகிச்சை பிரிவில் உள்ள 101 வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை ஐந்து பேர்கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சையில் இருந்த முருகனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். அண்மையில் நடந்த கொலைச் சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கக் கூடும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மர்ம கும்பல் மருத்துவமனையில் புகுந்து கொலை செய்த சம்பவம் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.