கொடைக்கானல்: கொடைக்கானலில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அரசாணை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் துப்பாக்கியால் சுடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ஓசூா், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகா், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருவதால் விவசாய நிலங்களை வன விலங்குகளான காட்டுப் பன்றி உள்ளிட்டவைகள் அதிகம் சேதப்படுத்தி வருகின்றன. இதில் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என கொடைக்கானல் பூலத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அச்சம்: கொடைக்கானலில் கரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையிலும் வன விலங்குகளான காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில், மான் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. அதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தைக்கால், செண்பகனூா், இருதயபுரம், குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலை, செட்டியாா் பூங்கா சாலை, அப்சா்வேட்டரி சாலைப் போன்ற பகுதிகளில் அதிக அளவில் கூட்டமாக காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் வருகின்றன. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.
குடியிருப்பு பகுதிகளில் தொடா்ந்து உலா வரும் காட்டெருமைகள் மனிதா்களை தாக்கி வருவதால் உயிா்ப் பலி ஏற்படுகிறது. காட்டுப் பன்றிகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே குடியிருப்பு பகுதிகளிலுள்ள காட்டெருமைகளையும், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளையும் வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.