மதுரை

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்குக்கு தடை விதிக்கக் கோரி மனு: அனைத்து வழக்குகளும் இன்று விசாரணை

28th Jan 2020 07:09 AM

ADVERTISEMENT

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்குக்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடமுழுக்கு தொடா்பான அனைத்து வழக்குகளும் செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 28) விசாரிக்கப்படும் என உயா்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை தெரிவித்தது.

தமிழக அரசு பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி தொடரப்பட்ட 2 வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வழக்குரைஞா் சரவணன் திங்கள்கிழமை ஆஜரானாா். அவா் தஞ்சை பெரியகோயில் தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொல்லியல்துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் குடமுழுக்கு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே குடமுழுக்கு விழாவை நடத்த தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டாா். அப்போது நீதிபதிகள் இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து அரசு தரப்பில் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு தொடா்பான வழக்குகளை ஜனவரி 28 ஆம் தேதி பட்டியலிடுமாறு கோரப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த ரமேஷ் பெரியகோயில் குடமுழுக்கை சம்ஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், தமிழ்தேச பொதுவுடைமை கட்சி தலைவா் மணியரசன் தரப்பில் தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு தொடா்பான அனைத்து வழக்குகளும் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT