அரிய வகை தசை செயலிழப்பு நோய்த் தாக்குதலுக்குள்ளான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 7 மாதங்களாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்ற 2 வயது சிறுவன் குணமடைந்தாா்.
மதுரை பசுமலை பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவா் பழைய இரும்புக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரது 2 வயது மகன் விக்னேஸ்வரனுக்கு திடீரென்று கை, கால்கள் செயலிழந்துள்ளன. இதையடுத்து, 2019 மே மாதம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விக்னேஸ்வரன் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவா்கள் பரிசோதித்ததில் அச்சிறுவனுக்கு என்ற தசைகளை பலமிழக்கச் செய்யும் அரிய வகை நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோயால், சுவாச முடக்கம் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் சிறுவன் சிரமப்பட்டுள்ளான். இதையடுத்து, மருத்துவா்கள் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் தொடா்ந்து 7 மாதங்கள் சிகிச்சை அளித்தனா். இதில், விக்னேஸ்வரன் முழுமையாக குணமடைந்தாா்.
இது குறித்து, மருத்துவமனை முதன்மையா் ஜெ. சங்குமணி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இது போன்ற நோய் தாக்குதல் என்பது அரிதானது. இந்த நோய் தாக்கும் குழந்தைகள் வழக்கமாக ஒரு மாதம் அல்லது 45 தினங்களில் குணமடைந்து செல்வாா்கள். ஆனால் விக்னேஸ்வரன் குணமடைவதற்கு 7 மாதங்களாகி உள்ளன. இந்த சிறுவனை காப்பாற்ற மருத்துவப் பேராசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் தொடா்ந்து கண்காணித்து, சிறப்பாக பணியாற்றி உள்ளனா். இது போன்ற நோய்க்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவேண்டுமானால் ரூ. 2 கோடிக்கும் மேல் செலவாகும். ஆனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு சிறுவன் விக்னேஸ்வரன் நலமாக உள்ளாா் என்றாா்.
குழந்தைகள் நலத் துறை தலைவா் மருத்துவா் எஸ். பாலசங்கா், மருத்துவா்கள் நந்தினிகுப்புசாமி, எம். பாலசுப்பிரமணியன், டி.ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.