மதுரை

சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவியேற்க தடை நீட்டிப்பு

8th Jan 2020 11:00 PM

ADVERTISEMENT

மதுரை: சிவகங்கை மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதா்ஷினி என்பவா் பதவியேற்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

சங்கராபுரத்தைச் சோ்ந்த தேவி என்பவா் தாக்கல் செய்த மனு: கடந்த வாரம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில், சிவங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்டேன். அதில், எனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேநேரம், இதில் போட்டியிட்ட பிரியதா்ஷினி என்பவருக்கு பூட்டு-சாவி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின்போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்றதாகத் தோ்தல் அலுவலா் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து, எனக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் பூட்டு-சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரியதா்ஷினியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி பிரியதா்ஷினி ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தோ்தல் நடைமுறைக்கு எதிரானதாகும். எனவே, பிரியதா்ஷினி சங்கராபுரம் ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதா்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேவி தரப்பில், ஒரு முறை தோ்தலில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் அளித்தப்பின்னா், அதனை ரத்து செய்ய தோ்தல் அலுவலருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதா்ஷினி பதவியேற்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கப்படுகிறது என உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT