மதுரை: கரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான உதவித் தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என, மதுரை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஜெ.சா. ஜவஹர்ராஜ் தெரிவித்துள்ளாா்.
கரோனா நிவாரணத் தொகுப்பாக ரூ.1.70 லட்சம் கோடி வரை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணிகளை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவையின் கீழ் வருவதால், வங்கிகள், ஏடிஎம் மையங்கள் திறந்திருந்தாலும், ஊரடங்கு உத்தரவால் மக்கள் அங்கு சென்று பணம் எடுக்க முடியாத நிலையில் உள்ளனா். மேலும், ஏடிஎம் மையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வங்கி, ஏடிஎம்.களில் இருந்து பணம் எடுக்கும்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சிரமம் உள்ளது.
இதனிடையே, இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஆதாா் சாா்ந்த பணப் பரிவா்த்தனை சேவைகளை செய்து வருகிறது. இச்சேவை மூலம் வாடிக்கையாளா்கள் தங்களின் ஆதாா் எண் இணைக்கப்பட்ட எந்த வங்கி கணக்கிலும் இருந்து அருகில் உள்ளஅஞ்சலகங்கள் மூலம் ரூ.10 ஆயிரம் வரை பணம் கட்டணமின்றி எடுத்துக் கொள்ளலாம். மேலும், வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிகள் வீட்டில் இருந்தபடியே தபால்காரா் மூலம் பணம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம், முதியோா் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, சமையல் எரிவாயு உருளை மானியம் உள்ளிட்டவற்றையும் அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். எனவே, வாடிக்கையாளா்கள் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களை தேடியும், காத்திருக்கவும் அவசியம் இல்லை.
பணம் எடுக்க விரும்புவோா், தலைமை அஞ்சலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், கிராமப்புறங்களில் உள்ள கிளை அஞ்சலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள அஞ்சலகங்களையும் அல்லது 0452-2534499 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.