திருப்புவனத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் 2 இளைஞர்கள் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேரடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வீட்டிற்கு வந்த அஜித்குமார், அன்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய தந்தை சுப்பிரமணியன் அளித்த புகாரில் திருப்புவனம் போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில், அஜித்குமார் கொலை செய்யப்பட்டு சடலம் திருப்புவனம் வைகை ஆற்றில் புதைக்கப்பட்டிருப்பது சில தினங்களுக்கு முன்னர் தெரிய வந்தது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அஜித்குமாரை, திருப்புவனம் வைகை ஆற்றுக்கு வரவழைத்து ஒரு கும்பல் வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இவ்வழக்கின கொலைக் குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய திருப்புவனத்தைச் சேர்ந்த அருண்குமார் (22), மணிரத்னம் (23) ஆகியோர் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.