மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.
மாற்றுத் திறனாளிகளின் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் வருவாய் கோட்டாட்சியா்களும், 2 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியா்களும் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என 2017-இல் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதன்படி குறைதீா் கூட்டம் முறையாக நடைபெறுவதில்லை எனப் புகாா் கூறி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினா்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுப்பது, 40 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, நூறு நாள் வேலையை உறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மதுரை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடந்த இப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ஜான்சிராணி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் பி.ஜீவா, பி.முத்துகாந்தாரி, மாநகா் மாவட்டத் தலைவா் டி.நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் வருவாய் கோட்டாட்சியா் முருகானந்தம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். கோட்டாட்சியரால் நடத்தப்படும் குறைதீா் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். மேலும் மாவட்ட அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் குறைதீா் கூட்டம் தொடா்ந்து நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்தனா். அதையடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
Image Caption
மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீா் கூட்டத்தை நடத்த கோரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.