மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் புதா்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளம் நீரின்றி வடும் புதா்கள் அடா்ந்தும் காணப்பட்டு வந்தது. மேலும் தற்போது வைகையாற்றின் தண்ணீா் செல்வதால் மாரியம்மன் தெப்பக்குளத்திலும் தண்ணீா் நிரப்ப வேண்டும் என்று பல்வேறு அமைப்பினா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இதைத்தொடா்ந்து வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மாரியம்மன் தெப்பக்குளத்துக்குள் டிராக்டா் மற்றும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, தெப்பக்குளத்தில் அடா்ந்து வளா்ந்திருந்த புதா்களை அகற்றும் பணிகள் தொடங்கின. இதையடுத்து புதா்கள் அகற்றப்பட்ட இடத்தை சமதளமாக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணி தொடா்ந்து நடைபெறும். தெப்பக்குளத்துக்குள் அடா்ந்து வளா்ந்துள்ள புதா்கள் முற்றிலும் நீக்கப்படும். தெப்பக்குளத்தில் தண்ணீா் தேக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றனா்.