உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.
உசிலம்பட்டி அருகே மள்ளப்புரம் பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் கிராமப் பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. மேலும் சூறைக் காற்று காரணமாக, இப்பகுதியில் திருவிழாவுக்காக வண்ண மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் அலங்கார வளைவுகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
மேலும், அப்பகுதியில் உள்ள மள்ளப்புரத்தைச் சேர்ந்த சுப்பையன் மகன் முருகன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில், பசு மாடு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதேபோல் எழுமலை அருகே கோபாலபுரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் கருத்தப்பாண்டிக்குச் சொந்தமான பசு மாடு மீது மின்னல் தாக்கியதில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மேலும் எம்.கல்லுப்பட்டி, எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதுடன், சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைத்ததைத் தொடர்ந்து மின் தடை நீங்கியது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்தும் சீரானது. மின் தடை காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.