மதுரை அருகே திங்கள்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றால் அறுவடைக்கு தயாரான பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளான கல்லணை, குறவன்குளம், பெரிய ஊர்சேரி, கல்வேலிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான ஏக்கரில் கொய்யா, வாழை, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு பலன்தரும் மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் ஊர்சேரி பகுதியில் உள்ள தோப்பில் அறுவடைக்கு தயாரான பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இதே போன்று அலங்காநல்லூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலன் தரக் கூடிய ஏராளமான பழ மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்தன.
இதனால் ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மேலும், சூறைக் காற்றுக்கு வலசை, முடுவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. இதே போன்று அலங்காநல்லூர், எல்லப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மேலும், சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.