மதுரையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியை முற்றுகையிட்டு போரட்டம் நடத்திய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் 120 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை கே.கே.நகர் பகுதியில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பேராசிரியர் பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முறைகேடுகளில் ஈடுபடும் கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கல்லூரியை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அதன் மாநில பொதுச் செயலர் அப்துல் சமது, தெற்கு மாவட்டத் தலைவர் ஷேக் இப்ராஹிம், வடக்கு மாவட்டத் தலைவர் அப்துல் லத்தீப், துணைப் பொதுச் செயலர் முகமது கௌஸ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கல்லூரியை நோக்கிச் சென்றனர்.
கல்லூரி வாயிலில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதை மீறி போராட்டக்காரர்கள் கல்லூரியை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளையும் அகற்ற முயன்றதால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீஸார் கைது செய்து வாகனங்களில் கொண்டு சென்றனர்.