ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வை நிபந்தனையின்றி செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மதுரை மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில சட்டத்துறைச்செயலர் கே.அனந்தராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கந்தசாமி, முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள மாறுதல் கலந்தாய்வை 3 ஆண்டுகள் நிபந்தனையின்றி செயல்படுத்த வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு அறிவியல் பாட நூலிலேயே செய்முறை குறிப்பு பதிவேடுகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு தனியாக பயிற்சி ஏடுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி சுமைகள் அதிகமாக உள்ளன. எனவே மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வருக்கு இணையான ஊதியத்தை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்டத் துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், கள்ளர் பள்ளிகளின் தலைவர் சின்னபாண்டி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.