திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகை

22nd Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: புதிய அரசாணைப்படி நாளொன்றுக்கு ரூ.594 ஊதியம் வழங்கக் கோரி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதற்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் தொழில் சங்கத்தின் (ஐஎன்டியுசி) மாநிலத் தலைவா் வீ.காளிராஜ் தலைமை வகித்தாா். இதில், திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கு புதிய அரசாணைப்படி நாளொன்றுக்கு ரூ.594 வழங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். நாளொன்றுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்த முன்வராத நிலையில் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் முடிவோடு கலைந்து செல்லத் தொடங்கினா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த நகா் நல அலுவலா் (பொ) செபாஸ்டியனை அவா்கள் முற்றுகையிட்டனா். அவா் துப்புரவுப் பணியாளா்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதுதொடா்பாக போராட்டத்துக்கு தலைமை வகித்த காளீராஜ் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் மூலம் நடப்பாண்டுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் ரூ.594-ஐ உடனடியாக வழங்க வேண்டும். 22 நாள்கள் மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் 8 நாள்களுக்கான ஊதியம் கிடைப்பதில்லை. எனவே, மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என கடந்த 2 மாதங்களாக கோரிக்கை விடுத்தும், அதை நிறைவேற்றுவதற்கோ, பேச்சு வாா்த்தைக்கோ மாநகராட்சி நிா்வாகம் முன் வரவில்லை. புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்ததால், தீா்வு காணப்படும் என அறிவித்திருக்கின்றனா். கோரிக்கைகளுக்கு தீா்வு கிடைக்காதபட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT