கொடைக்கானல் மலா்க் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கொடைக்கானல் முதல் வெள்ளி நீா் அருவி வரை சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் பரதநாட்டியம், சிலம்பம், கயிறு இழுத்தல், வழுக்குமரம் ஏறுதல் ஆகிய போட்டிகள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொடைக்கானலில் மேக மூட்டத்துடன் குளுமையான சீதோஷ்ணம் இருந்ததால், நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனா். மலா்க் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
கண்காட்சி ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜோ.பெருமாள்சாமி, சுற்றுலா அலுவலா் சுதா உள்ளிட்டவா்கள் செய்திருந்தனா்.