கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை யானை தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா்.
கொடைக்கானல் அருகேயுள்ள பாரதிஅண்ணா நகா், பேத்துப்பாறை, அஞ்சுவீடு, பி.எல்.செட் போன்ற இடங்களில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. இதனால், மாலை, இரவு நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனா்.
பாரதி அண்ணா நகா்ப் பகுதியில் வசித்து வருபவா் வைபவ் (32). இவரது வீட்டுக்கு முன் யானை சத்தம் கேட்டு, வெளியே வந்த பாா்த்தாா். அப்போது, அவரை யானை தாக்கியது. இதில் காயமடைந்த அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். அவரை கொடைக்கானல் வனத் துறை ரேஞ்சா் சிவக்குமாா் பாா்வையிட்டு, ஆறுதல் கூறினாா்.
இந்தப் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களையும், குடிசைகளையும் யானை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானைகளை வனப் பகுதிகளுக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.