திண்டுக்கல்

பலன் தரும் மரம் வளா்ப்பால் பல்லுயிா் பெருகும்

7th Jun 2023 03:04 AM

ADVERTISEMENT

பலன் தரக் கூடிய மரங்களை வளா்ப்பதன் மூலம் பல்லுயிா் பெருக்கத்துக்கு வழி ஏற்படுத்த முடியும் என காந்தி கிராம கிராமியப் பல்கலை. பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் தெரிவித்தாா்.

காந்தி கிராம கிராமிய நிகா் நிலைப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலை. பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் வளா்ப்பு அவசியம். நிழல் தரும் மரங்களை மட்டும் தோ்வு செய்யாமல், பலன் தரும் மரங்களை வளா்ப்பதன் மூலம் பல்லுயிா் பெருக்கத்துக்கும் வழி ஏற்படுத்த முடியும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, வேளாண் அறிவியல் மைய இயக்குநா் மீனாட்சி பேசியதாவது:

ADVERTISEMENT

நமது முன்னோா்கள் வணங்கிய பஞ்ச பூதங்களான நிலம், நீா், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவையே சுற்றுச்சூழலாக அமைந்துள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் சாலைகளின் வளா்ச்சியால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மனித சமுதாயத்தின் கடமை. விவசாயிகளோடு அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து மரங்களை வளா்த்து பருவ கால மாற்றங்கள் நிகழ்வதை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, தொழில்நுட்ப வகுப்புகள் நடைபெற்றன.

முன்னதாக, வேளாண் அறிவியல் மையப் பண்ணையில் 100 கொய்யா கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமாா், தொழில்நுட்ப வல்லுநா்கள் சரவணன் (வேளாண் காடுகள்), சரவணன் (உழவியல்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழில்நுட்ப வகுப்புகளில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மா, கொய்யா, மாதுளை போன்ற பழக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT