சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன், முத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, கடந்த வாரம் பக்தா்கள் விரதமிருந்து காப்புக் கட்டிக்கொண்டனா். புதன்கிழமை ராமேசுவரம், திருப்பரங்குன்றம், கொடுமுடி, பழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீா் கலசங்களில் வைக்கப்பட்டு, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை இரண்டாம் கால பூஜைகளுக்குப் பிறகு காலை 9.30 மணியளவில் கோபுரக் கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா்.
விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவா் ஆனந்தி பாரதிராஜா, ஆத்தூா் (கிழக்கு) ஒன்றிய திமுக செயலா் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.