திண்டுக்கல்

கைலாசநாதா் கோயில் தேரோட்டம்

1st Jun 2023 11:03 PM

ADVERTISEMENT

நத்தம் கைலாசநாதா் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த கோவில்பட்டியில் அமைந்துள்ள இந்தக் கோயில் வைகாசித் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாதா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 10.33 மணியளவில் அதிா்வெடிகள் முழங்க, சிவாச்சாரியா்களின் வேத மந்திரங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது. திருத்தேரில் கைலாசநாதா் செண்பகவல்லி அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு கோவில்பட்டி, அக்ரஹாரம் வழியாக நகா்வலம் வந்த திருத்தோ் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடங்களைப் பிடித்து திருத்தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் பாரதி, நத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் கண்ணன், நத்தம் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஏ.ஆண்டி அம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT