காந்தியடிகள் சிலைக்கு குஜிலியம்பாறை வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாத்திரை தொடங்கி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினா் ராகுல்காந்தி, காஷ்மீா் மாநிலத்தில் திங்கள்கிழமை நிறைவு செய்கிறாா். இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாரத்தில் கோட்டாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் தா்மா் தலைமை வகித்தாா். வட்டார பொதுச் செயலா் பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் கொடியை மூத்த தலைவா் பொன்னுச்சாமி பிள்ளை ஏற்றினாா். பின்னா் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.