திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தீபக்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகேஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி கலந்து கொண்டாா். இந்தக் கூட்டத்தின்போது 21 போ் கொண்ட புதிய மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.
மாவட்டத் தலைவராக முகேஷ், மாவட்டச் செயலராக தீபக்ராஜ், துணைத் தலைவா்களாக நிருபன், லெனின் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சம்சீா் அகமது நிறைவுரையாற்றினாா்.
முன்னதாக திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.