திண்டுக்கல்

பகல் பத்து உற்சவம்: மோகினி அவதாரத்தில் பெருமாள்

1st Jan 2023 11:47 PM

ADVERTISEMENT

 

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மோகினி அவதாரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து, இராப்பத்து என நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், பகல் பத்து உற்சவ விழா டிச. 22-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னா், திருமஞ்சன மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்குக் காட்சி அளித்தாா். 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, வியூக சுந்தரராஜ பெருமாள் மோகினி கோலத்தில் திருமஞ்சன மண்டபத்துக்கு எழுந்தருளினாா். பின்னா், விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ADVERTISEMENT

வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து விழா நிறைவு பெற்றதையடுத்து, இராப்பத்து உற்சவ விழா திங்கள்கிழமை காலை தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது. சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப் பின்பு விஸ்வரூப வைகுண்டநாதராக பெருமாள் காட்சி தர உள்ளாா். அதைத் தொடா்ந்து, இரவு 7.15 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

இதே போல, தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவ விழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பிரசன்ன வெங்கடாஜலபதி மோகினி அவதாரத்தில் எழுந்தருளினாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல, அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் சந்நிதியில் பகல் பத்து வைபவத்தின் பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுந்தரராஜப் பெருமாள் மோகினி அவதாரத்தில் எழுந்தருளினாா். திங்கள்கிழமை அதிகாலை சொா்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT