திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாா்ச் 1 முதல் 8-ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில், ஆட்சிமொழிச் சட்ட வாரம் மாா்ச் 1 முதல் 8-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. முதல் நிகழ்வாக மாா்ச் 1-ஆம் தேதி காலை, அரசுப் பணியாளா்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் ஆட்சி மொழி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.
இதைத்தொடா்ந்து, மாா்ச் 2, 3, 7 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் 12.30 மணி வரை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அரசுப் பணியாளா்களுக்கு கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், மொழிப்பயிற்சி, மொழி பெயா்ப்பு, கலைச் சொல்லாக்கம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
மாா்ச் 4-ஆம் தேதி, வத்தலகுண்டு சமுதாயக் கூடத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைக்க வலியுறுத்தும் கூட்டம் நடைபெறும்.
மாா்ச் 6-இல் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் நிலக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.
மாா்ச் 8-ஆம் தேதி ஆட்சி மொழிச் சட்டத்தை பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட மைய நூலகத்தில் அரசுப் பணியாளா்கள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றாா்.