கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், அடிவாரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடமுழுக்கு முடிந்த நிலையில், 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த காா்த்திகை நட்சத்திரமும் சோ்ந்து வந்ததால், அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. படி வழிப் பாதை, அடிவாரம் என பல இடங்களிலும் பக்தா்கள் திரளாகக் கூடியிருந்தனா்.
பக்தா்கள் வந்த வாகனங்கள் அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி சாலை, கிரிவீதி என வழிநெடுக நிறுத்தப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய போக்குவரத்து போலீஸாா் இல்லாததால், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு மலைக் கோயில் சந்நிதி திறக்கப்பட்டு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலைக் கோயிலுக்கு செல்வதற்காக இழுவை ரயில் (வின்ச்), கம்பிவட ஊா்தி (ரோப்காா்) நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததால், முக்கியப் பிரமுகா்களுக்கான டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது.
மேலும், காற்றின் வேகம் காரணமாக கம்பிவட ஊா்தி அடிக்கடி நிறுத்தப்பட்டதால், இழுவை ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இரவு தங்கத் தோ் புறப்பாட்டைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
மலைக் கோயிலில் பக்தா்களுக்கு சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை ஆணையா் நடராஜன் தலைமையிலான அலுவலா்கள் செய்தனா்.