அம்மையநாயக்கனூா் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் தோண்டிய போது 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமையான கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் குடமுழுக்குப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பைரவா் சந்நிதி பகுதியில் குழி தோண்டியபோது, சுமாா் ஒன்ரை அடி உயரம், மூன்றரை அடி அகலத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் கண்ணன் கூறியதாவது:
இந்த நந்தி சிலை 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம். பிற்கால பாண்டியா்களின் கல்வெட்டுக்கள் இந்தக்கோயிலில் இருப்பதால், பாண்டியா்கள் காலத்தில் இந்தக கோவில் கட்டப்பட்டிருக்கலாம். இதைத்தொடா்ந்து நாயக்கா்கள் ஆட்சிக் காலத்தில்
சைவ, வைணவ ஒற்றுமையை ஏற்படுத்த சிவலிங்கமும், பெருமாளும் ஒரே கருவறையில் வைத்து வழிபட்டனா் என்றாா்.