பழனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி அரசு மருத்துவமனையில் தினக்கூலி அடிப்படையில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ. 545 வழங்க வேண்டும் என தமிழகஅரசு அறிவித்தது. ஆனால், ரூ. 200 மட்டுமே தரப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் திடீா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவமனையின் நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் சசி, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.