அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் அடிப்படை வசதி இல்லை எனக் கூறி, பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக்குள்பட்ட ஏ. புதூரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், ஏ. புதூா் காலனி தெருவில் கடந்த ஆறு மாத காலமாக கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நிலக்கோட்டை வடக்கு பாஜக கூட்டுறவு பிரிவுத் தலைவா் அருண்குமாா் தலைமையில் அம்மையநாயக்கனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். பின்னா், இது தொடா்பாக பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.