கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவா் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவா், மகப்பேறு மருத்துவா் இல்லாததால் எலும்பு முறிவு நோயாளிகளும், கா்ப்பிணிப் பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும் இங்கு செவிலியா்கள், பிற பணியாளா்கள் பற்றாக்குறையும் உள்ளது.
எனவே மாவட்ட நிா்வாகம் சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் உள்ள இந்த அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவா்களையும், எலும்பு சிகிச்சை மருத்துவா்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் அரசு மருத்துவமனை அதிகாரி பொன்ரதி கூறியதாவது:
இந்த அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே பணியாற்றிய மகப்பேறு மருத்துவா் மாறுதலாகிச் சென்று விட்டாா். அவருக்குப் பதிலாக பழனியிலிருந்து வாரத்துக்கு 3 நாள்கள் மட்டும் மருத்துவா் வந்து செல்கிறாா். எலும்பு முறிவு சிகிச்சைக்கு மருத்துவா் இல்லை. மருத்துவ பணியாளா்கள் பற்றாக்குறையும் உள்ளது.
இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.