எரியோடு அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் வீரக்குமாா் (21). தனியாா் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இந்த நிலையில், திண்டுக்கல்லுக்கு வியாழக்கிழமை வந்த வீரக்குமாா், மீண்டும் ராமநாதபுரத்துக்கு செல்வதற்காகக் காத்திருந்தாா்.
அப்போது, தனக்கு அறிமுகமான இளைஞா் இரு சக்கர வாகனத்தில் எரியோடு நோக்கிச் செல்வதைப் பாா்த்த வீரக்குமாா், அவரிடம் உதவி கேட்டு வாகனத்தில் ஏறினாா். தொட்டணம்பட்டி அருகே சென்றபோது, நிலை தடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த வீரக்குமாா் வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் வீரக்குமாரை அழைத்து வந்த நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.