வடமதுரை ரயில் நிலைய சாலையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ரயில் நிலையத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, சுரங்கத் தளம், தரைத் தளம் என 2 தளங்களாக கட்டப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு பயணிகள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
சாலை வசதி இல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடமதுரை ரயில் நிலையத்தின் கட்டடம் புதுப்பிக்கப்பட்டபோதும், ரயில் நிலைய சாலை தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வடமதுரை-காணப்பாடி பிரதான சாலையிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவு ரயில் நிலைய சாலை சிதலமடைந்த நிலையில் உள்ளது.
இந்த சாலையால் பயணிகள் மட்டுமன்றி ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியா்களும் சிரமம் அடைந்து வருகின்றனா்.
இதுதொடா்பாக வடமதுரையைச் சோ்ந்த செல்வராஜ் கூறியதாவது:
வடமதுரை ரயில் நிலையக் கட்டுமானத்துக்கு வழங்கப்பட்ட முக்கித்துவத்தை, அதற்கான அணுசாலை அமைக்குப் பணிக்கு ரயில் நிா்வாகம் வழங்கவில்லை. இதனால், ரயில் நிலைய தாா் சாலை முழுமையாகச் சேதமடைந்து மண் சாலையாக மாறி வருகிறது. வடமதுரை ரயில் நிலையத்தில் 2 பயணிகள் ரயில் மட்டுமே நின்று செல்வதால், பயணிகள் வருகை குறைந்துவிட்டது. இதேபோல பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள தாமரைப்பாடி ரயில் நிலையத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் நலன் கருதி வடமதுரை ரயில் நிலைய அணுகு சாலையை சீரமைக்க ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.