தைப்பூசத்தை முன்னிட்டு, பழனி சண்முகநதியில் வைக்கப்பட்டிருந்த 24 அடி உயர பித்தளை வேலை பொதுப் பணித் துறையினா், காவல் துறையினா் வியாழக்கிழமை அதிகாலையில் அகற்றினா்.
தைப்பூசத் திருவிழாவின்போது இந்த வேல் அங்கு அமைக்கப்பட்டு விழா முடிந்த பின்னா் அகற்றப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த வாரம் சண்முகநதியில் வேல் அமைக்கப்பட்டது. தைப்பூசத் திருவிழா வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த வேலை அகற்ற வேண்டும் என பொதுப் பணித் துறையினா் புதன்கிழமை கோயில் நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேல் அகற்றப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் வேல் வைக்கப்பட்டிருந்த பீடம் தகா்க்கப்பட்டு வேலை லாரியில் ஏற்றி போலீஸாா் கொண்டு சென்றனா்.
இதைத் தடுக்க முயன்ற மெய்த்தவம் பொற்சபை நிறுவனா் மெய்த்தவ அடிகளாரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
திருவிழா முடியும் வரை வேலை அந்த இடத்தில் மீண்டும் அமைக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.