பழனி வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்துள்ளதாக இதுவரை நடைபெற்ற கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணை, கலிக்கநாயக்கன்பட்டி குளம், கோதைமங்களம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் 2023-ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதுகுறித்து வனச்சரகா் பழனிக்குமாா் கூறியதாவது:
பழனி பகுதியில் தற்போது நல்லமழை பெய்துள்ளதால் விவசாயப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான பறவைகள் பழனி பகுதிக்கு வந்துள்ளன. இதுவரை மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவாகி உள்ளன. இவற்றின் வகைகள் குறித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பறவைகள் வேட்டையாடுவது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.