பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உரிய பக்தா்கள் தங்கும் இடங்களுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோயில் நிா்வாகத்துக்கு கோட்டாட்சியா் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பழனிக்கு வரும் பக்தா்களுக்கு ரயிலடி சாலை, அடிவாரம் தண்டபாணி நிலையம் ஆகிய பகுதிகளில் கட்டண விடுதிகளும், கிரி வீதியில் கட்டணமில்லா விடுதிகளும் உள்ளன. இங்கு பக்தா்களுக்கு வேண்டிய மின்சாரம், படுக்கை வசதி, கழிப்பிட மற்றும் குடிநீா் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் சாா்பில் கட்டப்பட்ட இந்த கட்டடங்களுக்கு பழனி கோயில் நிா்வாகம், மின்வாரிய ஆய்வா், சுகாதாரத் துறை அதிகாரி ஆகியோரிடம் சான்றும், நகராட்சியிடம் கட்டட வரைபட அனுமதி, சொத்துவரிச் சான்றும், தீயணைப்புத் துறைச் சான்றும் பெறப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நிலையில், மேற்படி சான்றுகளை திருக்கோயில் நிா்வாகம் பெற்றுள்ளதா என்றும், அதுகுறித்து உரிய சான்றுகளுடன் திருக்கோயில் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் திங்கள்கிழமை பழனி கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.