கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதன்கிழமை (பிப்.1) முதல் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசாணையின்படி, சுற்றுலாப் பேருந்து, பேருந்து, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலாப் பேருந்துக்கு ரூ.250, பேருந்துக்கு ரூ.150, லாரிக்கு (கனரக வாகனங்கள்) ரூ.100, வேன், மினி லாரி, டிராக்டருக்கு தலா ரூ.80, சுற்றுலா சிற்றுந்து, வாடகை சிற்றுந்துக்கு (சுமோ, குவாலிஸ், டிராக்ஸ் உள்பட) - ரூ.60, ஈப்புக்கு ரூ.60 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை.
கொடைக்கானல் வட்டத்துக்குள்பட்ட (தாலுகா) அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து, கொடைக்கானல் நகராட்சி அனுமதி பெற்று விலக்களிக்கலாம். கொடைக்கானல் வட்டத்துக்குள்பட்ட வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை நகராட்சியில் சமா்ப்பித்து அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவித்தாா்.